சுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 5, 2019

சுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக!!

நான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது மகனாக ஒரு தமிழ் மகனாக நின்று இன்றைய எங்கள் நிலைமைகளைப் பார்க்கும் போது என்னுள்ளத்தில் எரியும் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் கொட்டித் தீர்க்க இங்கு வந்துள்ளேன்.

என் வார்த்தைகள், கருத்துக்கள் உங்களைச் சுடலாம். ஆயினும் உங்களைச் சுடும் என்பதற்கப்பால் போர் அது கொண்டு வந்த அவலங்கள் இவற்றால் காயப்பட்ட என்னுடைய, எங்களுடைய உள்ளத்தின் புன்களில் நின்றும் வழிந்தோடிய இரத்தத்தின் பின் வடிந்து வருகின்ற ஊனங்கள் இவை. ஊனக் கசிவுகள் இவை.

இதற்கிடையில் இந்தக் கருத்தமர்வை ஒழுங்கு செய்தவர்கள் தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் என்று அழைப்பிதலில் குறிப்பிட்டிருந்தாலும் இந்த அரசியல் அரங்கிற்காக உருவாக்கப்பட்ட குழாமாகத் தோற்றமளிப்பதாலும் பதிலிருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்று இருப்பதனால் அவரும் அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாயலுமே இக் கருத்தரங்கின் ஒழுங்கமைப்பில் இருப்பதாகத் தென்படுகிறது. அதனால் கூட்டமைப்பையே முன்னிலைப்படுத்தி எனது கசிவைக் கசிய விடுகிறேன். எங்கிருந்து இந்தக் கசிவைக் கசிய விடுவது?

இங்கிருந்தே தொடங்குகின்றேன்.

இது ஏன் இன்று

இதில் முதலாபவதாக இது ஏன் என்று இந்த மக்கள் மனமறியும் அரசியல் கருத்தரங்கு உங்களுக்கு. எங்கள் மனங்களை அறிய உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. என்ன உரிமை இருக்கிறது. நீங்கள் யார்? உளவியல் ஆற்றுப்படுத்துகிறவர்களாக இருந்தால் எங்கள் கதைகளைக் கேட்கலாம். அல்லது இன்றைய அரசியலில் பொது மக்களின் கருத்துக்கள் உங்களுக்குத் தெரியாதா? அது நன்றாக உங்களுக்குத் தெரியும்.

இவ்வளவு காலமாக திரும்பிப் பார்க்காத மக்களை இன்று திருப்பிப் பார்க்க காரணம் என்ன? எனது பார்வையில் இந்த மனமறியும் அரசியல் களம் எதற்காக என்றால் எதிர்வரும் தேர்தலுக்காக மக்களிடம் வாக்குக் கேட்க வருவதற்காக நாடி பிடித்துப் பார்க்கும் வேவு வேலை இது.

அல்லது மாற்றுத் தலைமை ஒன்று உருவாகி வருகிறது என்பதால் அதற்கு ஈடுகொடுத்து உங்கள் தலைமையைத் தக்க வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நகர்வு இது. அல்லது தோற்றுப் போகின்ற உங்கள் அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு அரசியல் களம் இது. எது எவ்வாறாக இருந்தாலும் it is too late.

இன்றைய நிலையில் எங்கள் மனங்களை நீங்கள் அறிய வேண்டுமா, அல்லது உங்கள் மனங்களை நாங்கள் அறிய வேண்டுமா?. எங்கள் உரிமைகளை வெற்றெடுப்பதற்கான ஏக்கங்களை தவிப்புக்களை ஒன்று திரட்டி 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனமாக எங்களுக்குக் காட்டினீர்கள். அதற்கு நாங்களும் சம்மதம் தெரிவித்து உங்களை அனுப்பி வைத்தோம்.

ஆனால் நீங்கள் தடம் மாறிப் போனீர்கள். ஏனென்று கேட்டால் அது அரசியல் இராஐதந்திரம் என்கிறீர்கள். ஆனால் அது தோற்றுப் போகிறதைத் தான் நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு அரசியலில் இன்று பேசு பொருளாக இருக்கும் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவது பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று "என்னால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது பாராளுமன்றே தீர்மானிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு ஒருபோதும் வராது. இதனை அமைச்சர் மனோ கணேசன் இரண்டு வருடங்களுக்கு முதல் கூறியதை இன்று யாழில் வந்தும் கூறுகின்றார். ஆனால் நடிகர் கவுண்டமணியின் பதிலை போன்று நீங்கள் சொல்வதற்கு இன்னும் நீண்ட தூரம் இல்லை. அரசியலில் இது எல்லாம் சகஐம் தான். இன்று எங்களுடைய கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் இன்றைக்கு இந்த மேடையில் நீங்கள் பதில் சொல்லத் தான் போகின்றீர்கள்.

ஆனால் அவை எங்களைத் திருப்திப்படுத்தப் போவதில்லை. ஏன் என்றால் கடைக்குந்தில் இருந்து பத்திரிகை வாசிக்கிறவருக்கும் இன்றைய அரசியல் புரியும். ஆயினும் எங்கள் மனக்குமுறல்களை உங்கள் முன் கொட்டி விடுகின்றோம்.

தலைமைத்துவம்

இன்று தமிழ் மக்களாகிய எங்களுக்கு ஒரு சமயத் தலைவரோ சமூகத் தலைவரோ அரசியல் தலைவரோ இல்லாத வெறுமையைப் பார்க்கின்றோம். இருக்கின்ற தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களுள் பெரும்பான்மையினர் நேர்மையில்லாதவர்களாக சுத்துமாத்துப் பண்ணுகிறவர்களாக, தெற்கில் ஒரு கதை வடக்கில் ஒரு கதை சொல்லுகிறவர்கள் வெளிப்படைத்தன்மையில்லை. அதனாலேயே உண்மைத் தன்மையை காண முடியாதுள்ளது. நீண்ட நோக்கற்றவர்கள் கொள்கையற்றவர்கள் கட்சி தாவுகிறவர்கள் தமிழ் மக்கள் எங்களை விலை பேசப் பின்நிற்க மாட்டார்கள். இருக்கிறவர்களில் எங்களுக்கு நமப்பிக்கையே இல்லாமல் போய் விட்டது.

மாற்றுத் தலைமை

இன்று வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுத் தலைமை வேகமாக உருவாகி வருவதைப் பற்றி சாதகமான, எதிர்மறையான கருத்துக்கள் உலாவுகின்றன. அவை எப்படியாக இருந்தாலும் என்னுடைய கேள்வி என்னவெனில் இந்த மாற்றுத் தலைமை உருவாகக் காரணம் என்ன.

மாகாண ஆட்சியில் அவர் இருந்த போது கூட்டமைப்புடன் பல தடவைகளில் முரண்பட்டது எல்லோரும் அறிந்ததே. இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என்னவென்று முன்னாள் முதலமைச்சர் திரும்பத் திரும்பச் சொன்ன ஒரேயொரு பதில் "நான் 2015 ஆம் ஆண்டு மக்கள் கொடுத்த ஆணையின் படி (தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி) செயற்படுகின்றேன். அதை அவர்கள் செய்கின்றார்கள் இல்லை. அதனாலேயே இந்த முரண்பாடு ஆகும்".

சமஷ்டி ஆட்சியென்று 2015 ஆம் ஆண்டு வடக்கின் தேர்தல் மேடைகளில் பேசினீர்கள். பின்பு தெற்கு சென்று ஒற்றையாட்சி என்றீர்கள். மீண்டும் வடக்கு வந்து இரண்டும் ஒன்று தான் ஆனால் சொற்பதங்கள் வேறு என்கின்றீர்கள். இதை நாங்கள் நம்ப வேண்டும். we are not fools. நாங்கள் இன்று உங்களிலே நம்பிக்கை இழக்க நீங்கள் காரணமாகி விட்டீர்கள். எங்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்.

ஏன் இந்த முண்டு?

கடந்த ஒக்ரோபர் மாதம் தென்னிலங்கையில் நடந்த அரசியல் அதிகாரக் குளறுபடிகள் இரண்டு பெரும்பான்மை இனவாதக் கட்சிகளிடையே நடந்த அதிகாரப் போட்டிகளின் வெளிப்பாடு. இந்த முரண்பாடுகளைத் தீர்த்து வைத்ததில் கூட்டமைப்பின் பங்களிப்பு முதன்மையானதும் காத்திரமானதுமாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

உங்களது இந்தச் செயற்பாட்டாலே தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்ன?. இல்லை நீங்கள் தான் அடைந்த நன்மை என்ன?. பதவியிழந்த பிரதமர் மீண்டும் தம் பதவியைப் பெற்றுக் கொண்டார். பதவி ஏறி பதவி இறக்கப்பட்ட மகிந்தவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. வில்லங்கமாக மூக்கை நுழைத்துக் கொண்ட உங்களது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான் பறிபோனது.

இது தமிழ் மக்களாகிய எங்களுக்கும் அவமானமாகி விட்டது. இந்த இடத்தில் கவிஞர் மேத்தாவின் கவிவரிகள் என் நினைவிற்கு வருகின்றன. அவன் பட்டு வேட்டி பற்றி கனவு கண்டு கொண்டிருந்த போது கட்டியிருந்த கோமணமும் களவாடப்பட்டது. இன்றைக்கு கோமணமும் இல்லாமல் அம்மணிமாக நிற்கின்றோம்.

இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?

2015 ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புக்களோடு எங்கள் பிரதிநிதிகளாக உங்களைப் நாடாளுமன்றம் அனுப்பி வைத்தோம். பிற நாடுகள் இலங்கை அரசின் மீது கொடுத்த அழுத்தத்தினாலும் உங்கள் பதவி மோகத்தாலும் அங்கே எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர்ந்து கொண்டீர்கள். யாருக்கு இந்த எதிர்க்கட்சிப் பதவி. தமிழ் மக்களுக்கானதா, இல்லை கூட்டமைப்பிற்கானதா, இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தன் என்ற தனிமனிதனுக்கானதா?. சம்மந்தன் என்ற தனிமனிதனுக்கானதாகத் தான் எங்களுக்குப் புரிகின்றது.

இந்த சுயநலத்துக்காக, சுய கௌரவத்திற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையை உங்கள் மேல் போர்த்திக் கொண்டு எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். உலக நாடுகளுக்கும் நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற மாயையை தோற்றுவித்து வெற்றி கண்டீர்கள். அதனால் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள் தான்.

உந்த எதிர்க்கட்சி பதவியால் நீங்கள் சாதித்தது என்ன?. எங்களுக்கு பெற்றுத் தந்தது என்ன? விடுவிக்கப்பட்ட நிலங்கள் என்று சொல்லப் போகின்றீர்களா, இல்லை எம் பிரதேசத்தின் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் என்று சொல்லப் போறீங்களா?

இவை எல்லாம் உங்கட எதிர்க்கட்சிப் பதவியினாலோ அல்லது நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதாலோ கிடைக்கவில்லை. அல்லது நீங்கள் பெற்றுத் தரவில்லை. இவற்றுக்கு நீங்கள் உரிமையும் கொண்டாட முடியாது. மாறாக நிலங்கள் நாங்கள் போராடிப் பெற்றது. அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு உள்ளும் புறமும் அழுத்தங்கள் இருந்தன.

ஆக உங்கள் எதிர்க்கட்சிப் பதவி உதவியது அரசாங்கத்திற்குத் தான். அரசிற்கு முண்டு கொடுப்பதற்குத் தான் உதவியது. உலகிலே ஒரு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதும் தான் சார்ந்து நின்ற மக்களை ஏமாற்றியதும் என்றால் அது கூட்டமைப்புத் தான். இந்த பெருமைக்கு சொந்தக்காரர் நீங்களும் நாங்களும் தான்.

பேரம் பேசும் சக்தி
இன்று தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரேயொரு மகத்தான மிகப் பெரும் சக்தி பேரம் பேசும் சக்தியே. ஏத்தனையோ சந்தரப்பங்கள் பேரம் பேசுவதற்கு உங்களுக்கு கிடைத்தன. ஐ.நாவில் கால அவகாசம் கொடுத்ததற்கு ஏற்ப இலங்கை அரசுக்காக பரிந்துரைத்த போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக நின்ற போது, இறுதியாக கடந்த ஒக்ரோபர் குழப்பத்தில் பிரதமரை நீங்கள் தூக்கிப் பிடித்தபோது பேரம் பேசுங்கோ என்று பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆனால் நீங்கள் அவற்றையெல்லாம் இலகுவாகத் தூக்கியெறிந்து விட்டு பெரும்பான்மையினரைக் குழப்பக் கூடாதென்றுவிட்டு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முண்டு கொடுத்தீர்கள். இன்று என்ன ஆனோம் நாம்?. உங்கள் தயவில் அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?. ஒரு வெற்றுத் தாளில் கையொப்பம் இட்டு யாராவது கொடுப்போமா?
கொடுத்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்… மொக்குகள் என்பார்கள். உதுகூடத் தெரியாதா என்பார்கள். இதையே ஒரு படித்தவன் செய்திருந்தால் என்ன சொல்வார்கள்?. படித்த முட்டாள் என்று சொல்லமாட்டார்களா?. இதைத்தான் இன்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
அண்மையில் வாசித்த பத்திரிகைச் செய்தி ஒன்று என்னைக் கவர்ந்தது. ஒரு தெற்கு அமைச்சர் கருத்து வெளியிடும் போது, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நாடாளுமன்றம் வந்தால் அவர்களைச் சமாளிப்பது எங்களுக்குக் கஸ்ரமாக இருக்கும் என்ற பொருள்படச் சொன்னார்கள்.

அந்தப் பயத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதிகாரம் இல்லமாமல் நாடாளுமன்று செல்லாமல் இங்கிருந்து அவர்களின் பேச்சு, தெற்கை அதிர வைக்கும் போது, அதிகாரத்தைக் கையில் கொண்டு நாடாளுமன்றம் சென்று வரும் உங்களை வீரவன்சவும், நாமலும் விமர்சிக்கிற அளவிற்கு நீங்களும், அதனால் நாங்களும் ஆகிவிட்டோம் என்று புளுங்குகின்றோம்.

அபிவிருத்தியா? உரிமைகளா?

இன்று எம் பிரதேசங்களில் ஓரளவு அபிவிருத்திகளைச் செய்து கொண்டு உரிமைகளைக் கேட்காதே என்று சொல்லாமல் சொல்கிறது அரசாங்கம். எங்களுக்கு அபிவிருத்தி தான் வேண்டுமென்று சில தமிழ்க் கட்சிகளும்… இல்லை, உரிமைகள் தான் வேண்டுமென்று இன்னும் சில தமிழ்க் கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்டு கொண்டு நிற்க, எங்கு செல்வதென்று வழிதெரியாமல் மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.

இந்தக் குட்டையில் மீன் பிடிக்கக் காத்துக் கிடந்த பிற கட்சிகள் ஆசை காட்டி, தந்திர மொழி பேசி, வழி தெரியாமல் நின்ற மக்களை தம்வசப்படுத்தி எங்கள் மண்ணில் காலூன்றி விட்டன. இதற்குக் காரணம் யார்?. இதை நீங்கள் ஐனநாயகம் என்று சொல்லுவீர்கள். இந்த ஐனநாயகத்திற்குள் கலாச்சார, மொழி, வாக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிரமிப்பு, இவையெல்லாம் நீங்கள் அறியாதவை அல்ல. ஆனாலும் ஏன் தான் அனுமதிக்கிறீர்கள். இதுவும் அரசியல் இராஐதந்திரமா?

யாழ்ப்பாணம் கள்வர் குகை

இன்று கிட்டத்தட்ட சகல துறைகளிலும் யாழ்ப்பாணம் சீரழிந்து கிடக்கிறது. போதைவஸ்துக்களின் சந்தை யாழ். குடிவகைகளின் விற்பனையில் சிகரம். அடிபிடி, வெட்டு, கொலை, ஆட்கடத்தல், பொருள் கடத்தல், வல்லுறவு என்று ஒருபுறம். விபத்துக்கள், தற்கொலைகள் மறுபுறம். இவற்றுக்குத் துணை போகும் பொலிஸாரினதும், அதிகாரிகளினதும் பொறுப்பற்ற நடவடிக்கைகள். யாழ்ப்பாணத்தில் நடந்தேறும் இந்த அராஐகங்களைப் பற்றி நீங்கள் அறியவில்லையா?

இவை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?. இவற்றை இல்லாதொழிக்க என்ன செய்தீர்கள்?. உங்களுக்குத் தெரிந்த சட்டங்கள் இவற்றுக்குப் பதில் சொல்லாதா?. இவற்றை இல்லாதொழிக்க தக்க பொறிமுறைகளை நீங்கள் வகுத்திருந்தால் மக்கள் ஒத்துழைப்புத் தந்திருப்பார்கள். அதைவிட்டு கஞ்சாவோடு பிடிபட்டவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பில் இருந்து இங்கு கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

அடிப்படைப் பிரச்சனைகளும் அன்றாடப் பிரச்சனைகளும்
அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக புதிய அரசியலமைப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நகல் முன்மொழியப்படுமா என்பதே சந்தேகம். முன்மொழியப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது வெட்ட வெளிச்சம். இந்த அரசியலமைப்பும் 2015 செப்ரெம்பரில் மங்கள சமரவீரவால் ஐ.நாவில் முன்மொழியப்பட்டதே. இது உங்களுடையதும் அல்ல. ஆகவே இதைப்பற்றிப் பேச மறுக்கிறேன்.
அன்றாடப் பிரச்சனைகள் என்று வரும் போது தங்களுடைய காணிகளைப் பறிகொடுத்துவிட்டு அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக கிட்டத்தட்ட 800 நாட்களாக வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களைச் சொல்லவா?, காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி அல்லது அவர்களுக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்லி சொல்லி வீதியோரங்களில் நின்று செத்துக் கொண்டிருக்கும் அவர்களின் உறவுகளைச் சொல்லவா?.

போருக்குப் பின்னான பத்து வருடங்களாக சுரண்டப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட கடல்ப் பிரதேசங்கள்… எங்கள் பரம்பரை நிலங்கள் இன்னும் அண்மை நாட்களாக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வவுனியாவின் எல்லைக் கிராமங்களை, நாயாற்றின் மையப் பகுதிகளைச் சொல்லவா?

வனவளப் பாதுகாப்பினராலும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் அங்கும் இங்குமாக எல்லையிடப்படும் எமது பிரதேசங்களைச் சொல்லவா?.

சிறைகளிலோ வாடும் அரசியல் கைதிகளைச் சொல்லவா?.
இந்த விடயங்களில் ஏன் மௌனிகளாக இருக்கிறீர்கள்?. உங்கள் சட்ட ஒழுங்கு அறிவினாலே இந்த மக்களையும் பிரதேசங்களையும் பாதுகாக்க முடியாதா?. போராடிப் போராடி செத்துக் கொண்டிருக்கும் மக்களை ஏன் சென்று சந்திக்கவில்லை?. ஆக்கிரமிக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரதேசங்களுக்காக ஏன் உங்கள் குரலை உயர்த்தவில்லை?.

தூக்கியெறியப்பட்ட பிரதமரை மீண்டும் கதிரையில் இருத்த நீதிமன்றம் சென்ற உங்களால் காணாமலாக்கப்பட்ட ஒரு உறவை மீட்க முடியாமல் போனது ஏன். வீதியில் கிடக்கின்ற கேப்பாப்புலவு மக்களோடு ஒரு சில மணித்துளிகளைச் செலவிட முடியாமல் போனது ஏன்?. ஓரேயொரு காரணம் தான் சொல்லுவேன். அதாவது உங்கள் சுயநலம், சுயநலம் சுயநலம் தான்.

இறுதியாக

1920 ஆம் ஆண்டு சேர் பொன்.அருணாச்சலத்துடன் தொடங்கிய எங்கள் உரிமைக்கான விடுதலைப் போர், வருகிற ஆண்டு 100 ஆவது வருடத்தைத் தொடுகின்றது. இத்தனை வருடங்களாக தமிழர் நாம் பெரும்பான்மை இனவாதக் கட்சிகளினாலே ஏமாற்றப்பட்டே வருகின்றோம். வந்து கொண்டே இருக்கின்றோம்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எம்மவர்களாலேயே ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதோடு, எனது எங்களின் இந்தகச் கசிவைத் தொடர்ந்தும் கசியவிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று கூறிக் கொள்கின்றேன். இனியும் எங்கள் தலைவர்களாக உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad