வியாழேந்திரன் மட்டுமே மகிந்த அணியில் - செல்வம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, November 3, 2018

வியாழேந்திரன் மட்டுமே மகிந்த அணியில் - செல்வம்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கோரி, மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யப் போவதாக கூறியிருக்கிறார் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளமை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார். அவரது இந்த கருத்திற்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். மானநஷ்ட வழக்கு தொடுப்பது குறித்து எனது வசட்டத்தரணிகளோடு கலந்துரையாடி வருகின்றேன்.

அவரிடம் 150 கோடி நஷ்டஈட்டை கோர தீர்மானித்துள்ளோம். அவரிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அவர் அதனை நிரூபிக்கட்டும். .

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டியவர். ஐ.நா தீர்மானத்தில் அவருடைய பெயரும் இருக்கிறது. அவர் மீண்டும் ஆட்சியை பெறக்கூடாது என்றுதான் மக்கள் புதிய ஜனாதிபதியை கொண்டு வந்திருந்தார்கள். புதிய ஜனாதிபதியும் தற்போது மாறுபட்ட கருத்துக்களை சொல்லி இருக்கின்றார். சமஷ்டி முறையை கொடுக்கமுடியாது, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது, அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் தனது இறப்புக்குப் பிறகு தான் அதை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட அவர் இவ்வாறு சொல்லியிருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சி அமைப்பதற்கான ஒரு செயலை செய்து, உரிமைக்காக போராடுகின்ற எங்களுடைய மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். இதுவரைக்கும் யாராவது என்மீது விரலை நீட்டி நான் மகிந்த ராஜபக்ஷவிடமோ ஜனாதிபதியிடமோ ரணில் விக்கிரமசிங்கவிடமோ பணத்தை பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அதனைவிடுத்து வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப கூடாது. இந்தவகையிலே சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு நிச்சயமாக தொடர்வேன். அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

வியாளேந்திரன் மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். அவருடைய சுயநலம் காரணமாகஅவர் செயல்பட்டிருக்கிறார். இந்த விடயத்திலே மஹிந்த வந்தால் என்ன ரணில்தான் இருந்தாலும் என்ன என்பதை விட, ஜனநாயகம் மறுக்கப்பட்டு வருகின்றது. அதனை காப்பதற்கு நாங்கள் செயற்பட்டாக வேண்டும். இன்று ஜனாதிபதி தவறான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வியாளேந்திரன் அதனை அனுபவிப்பார். ஏனெனில் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் இருக்கப் போகின்றது. இன்று இருக்கின்ற நிலவரப்படி பார்க்கின்றபோது ஜனநாயக முறையை தவறாக பயன்படுத்தியதாக அதற்கு எதிராக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வியாளேந்திரன் கிழக்கு மாகாண மக்களுக்கு துரோகமான செயலை செய்திருக்கிறார். கட்சி அவருக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் அவர் செயற்பட்டது மிகவும் தவறானது. மிக ஆக்ரோசமாக பேசிய ஒரு நபர் இன்று அந்த மக்களை ஏமாற்றியிருக்கின்றார். எனவே அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டவர இருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையும் இனி வரும் கட்சி மாறி செல்லமாட்டார்கள். வதந்தியை பரப்புபவர்களுக்கு ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் யாரும் மகிந்தராஜபக்ஷவின் அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வியாளேந்திரனை தவிர எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வதந்தியை பரப்புவது அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமையும் என மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad