‘குறிஞ்சாத்தீவு உப்பளத்தை தனியாரே நடத்துவார்கள்… கூட்டமைப்பை பங்காளியாக வருமாறு றிசாத் அழைப்பு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, April 10, 2019

‘குறிஞ்சாத்தீவு உப்பளத்தை தனியாரே நடத்துவார்கள்… கூட்டமைப்பை பங்காளியாக வருமாறு றிசாத் அழைப்பு!!

“எந்த உப்பளத்தையும் தனியாருக்கு வழங்குவதென அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவெடுத்துள்ளது. அதனால் கிளிநொச்சி குறிஞ்சாத்தீவு உப்பளத்தையும் அரசாங்கம் ஏற்று நடத்தாது“ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை அரசாங்கமே ஏற்று நடத்தி, உள்ளூர் இளைஞர்களிற்கு நியாயமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, பிரதமர் இன்று நிராகரித்தார்.

பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (4) நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பகுதி அபிவிருத்திகள் தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக இன்று, அதிகாரிகளையும் இணைத்து கலந்துரையாடல் நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், அர்ஜூன ரணதுங்க ஆகியோரும், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளத்தை அரசு ஏற்று நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை, சிறிதரன் எம்.பி முன்வைத்தார்.
எனினும், பிரதமர் அதை நிராகரித்தார். உப்பளங்களை தனியாரிடம் வழங்குவதென்ற கொள்கை முடிவை அரசாங்கம் எடுத்து விட்டதாக தெரிவித்தார். சிறிதரன் எம்.பி இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். எனினும், பிரதமர் தனது முடிவை மாற்றவில்லை.

இதேவேளை, ஆனையிறவு உப்பளத்தை ரிசாட் பதியுதீனின் குடும்ப நிறுவனமே இயக்குகிறது. கைத்தொழில் வாணிப அமைச்சின் மூலம், அதை அவர் சுலபமாக பெற்றுக்கொண்டிருந்தார். அருகிலுள்ள குறிஞ்சாத்தீவு உப்பளத்தையும், தற்போது ரிசாட் பதியுதீன் மற்றும் யாழ் நியமன எம்.பி அங்கயன் இராமநாதன் குடும்ப நிறுவனங்கள் பங்குபோடுகின்றன.

குறிஞ்சாத்தீவு உப்பளத்திற்கான ஒப்பந்தக்காரரை தீர்மானிப்பதற்கு முன்னதாக, திட்ட வரைபுகள் கோரப்பட்டபோது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் மூவாயிரம் பக்கத்தில் திட்ட வரைபை சமர்ப்பித்திருந்தார். எனினும், அது கணக்கிலெடுக்கப்படவில்லை. ரிசாட் பதியுதீன் மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோரின் குடும்ப நிறுவனங்களே குறிஞ்சாத்தீவை பங்கிடவிருப்பதாக அறிய முடிகிறது.
எனினும், அரசு இதை பொறுப்பேற்காத பட்சத்தில் உள்ளூர் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பை முறையாக வழங்க முடியாது, தற்போது ஆனையிறவு உப்பளத்தை சூழ உள்ளூர் தமிழர்களே இல்லையென்பதை சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டினார். இவர் இதை சுட்டிக்காட்ட, அந்த விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சரும், அந்த உப்பு நிறுவனத்திற்கு சொந்தமானவருமான ரிசாட் பதியுதீன் சிரித்தபடி இருந்தார்.
“நீங்களும் ஒரு முதலீட்டாளராக வாருங்கள். அல்லது, தமிழ் முதலீட்டாளர் ஒருவரை தாருங்கள். பங்குதாரராக்கி கொள்ளலாம்“ என ரிசாட் பதியுதீன் பதிலளித்தார்.

எனினும், தமிழ் தரப்பில் யாரும் உப்பளத்தில் முதலிட தயாராக இருப்பதாக தெரியவில்லை. புலம்பெயர் தொழில் அதிபர்களும் இதில் முதலிட தயாராக இருக்கவில்லை. இதனால், குறிஞ்சாத்தீவு உப்பளம் தமிழ் தரப்புக்களை விட்டு கைவிட்டு செல்லும் அபாயம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad