கலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, August 9, 2018

கலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும்

திரா­விட முன்­னேற்­றக்­க­ழகத் தலை­வரும் தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்­வரும் திரா­விட இயக்கத் தலை­வர்­களில் முது­பெரும் தலை­வரும் தமி­ழ­கத்தின் தன்­னிகர் இல்­லாத அர­சியல் தலை­வ­ரு­மான முத்­துவேல் கரு­ணா­நிதி தனது 94 ஆவது வயதில் கால­மா­ன­தை­ய­டுத்து தமி­ழ­கத்தில் பெரும் துக்கம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.
மறைந்த கலைஞர் கரு­ணா­நி­தியின் பூத­வுடல் பெரும் சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் நீதி­மன்றத் தீர்ப்பை அடுத்து மெரினா கடற்­க­ரையில் இலட்­சக்­க­ணக்­கான மக்­களின் கண்ணீர் அஞ்­ச­லிக்கு மத்­தியில் நேற்று நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது.
கரு­ணா­நி­தியின் பூத­வு­ட­லுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உட்­பட இந்­தியத் தலை­வர்கள் உட்­பட பெரு­ம­ள­வான முக்­கி­யஸ்­தர்கள் அஞ்­சலி செலுத்­தி­யி­ருக்­கின்­றனர். இலங்­கை­யி­லி­ருந்தும் அமைச்­சர்கள், எம்.பி.க்கள் நேரடி­யாக சென்று அன்­னாரின் பூத­வு­ட­லுக்கு மரி­யாதை செலுத்­தி­யுள்­ளனர்.
அர­சி­ய­லிலும் கலை, இலக்­கிய துறை­யிலும் பெரும்­பங்­காற்­றிய கலைஞர் கரு­ணா­நிதியின் மறை­வா­னது உண்­மை­யி­லேயே தமிழ் கூறும் நல்­லு­ல­கிற்கு பேரி­ழப்­பா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்­திலும் ஈழத்­த­மி­ழர்­க­ளது விட­யத்­திலும் கலைஞர் கரு­ணா­நி­தியின் பங்­க­ளிப்பு என்­பது மறுக்க முடி­யா­த­தொன்­றாக அமைந்­தி­ருக்­கின்­றது.
காலஞ்­சென்ற கரு­ணா­நிதி தமிழ் மக்­களின் கருத்­தி­ய­லிலும் தமி­ழக அர­சி­ய­லிலும் தமிழ் இலக்­கி­யத்­திலும் ஆற்­றிய பணி­களும் நிகழ்த்திய சாத­னை­களும் அவரை மறக்­க­மு­டி­யாத நிலை­மை­யினை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. 6 தசாப்­த­கா­ல­மாக 13 தட­வைகள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு வந்த இவர் ஐந்து தட­வைகள் முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்­துள்ளார். தமிழ்­மொழி மீது தீராத பற்­றுக்­கொண்­டி­ருந்த கரு­ணா­நிதி தமிழை செம்­மொ­ழி­யாக அறி­வித்­தி­ருந்தார்.
இவ்­வாறு அவர் தமிழ்­கூறும் நல்­லு­ல­கத்­திற்கு செய்த பணிகள் அளப்­ப­ரி­ய­ன­வாக இருக்­கின்­றன. இத­னால்தான் தமிழ்­கூறும் நல்­லு­ல­கத்­திற்கு அவ­ரது இழப்­பா­னது பேரி­ழப்­பாக மாறி­யி­ருக்­கின்­றது.
 இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்­திலும் ஈழத்­த­மி­ழர்­களின் போராட்ட விட­யத்­திலும் கரு­ணா­நி­தியின் பங்­க­ளிப்பு அன்­று­தொட்டு இருந்­து­வந்­துள்­ளது. இலங்கை தமி­ழர்­க­ளுக்­காக அவர் ஆட்­சியை இழந்தும் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­தியும் சட்­ட­மன்­றத்தில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றியும் இருந்தார். அனைத்­துக்­கட்­சி­களின் கூட்­டத்தை நடத்­தியும் மனித சங்­கி­லிப்­போ­ராட்­டத்தை மேற்­கொண்டும் அவர் ஈழத்­த­மி­ழர்­களின் விவ­கா­ரத்தில் அக்­க­றை ­காண்­பித்­தி­ருந்தார்.
1980களில் ஈழ போராட்ட அமைப்­புக்கள் தமி­ழ­கத்தில் நிலை­கொண்­டி­ருந்த காலத்தில் ஈழப்­போ­ராட்ட விட­யத்தில் கரு­ணா­நி­தியின் பங்­க­ளிப்­பா­னது ஓர­ள­விற்கு இருந்­தி­ருக்­கின்­றது. ஆனாலும் அன்று எம்.ஜி. ராமச்­சந்­திரன் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­கா­லத்தில் போராட்­டக்­கு­ழுக்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்­ற­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன.
அன்­றைய முத­ல­மைச்சர் எம்.ஜி. ஆர். தமிழ்­போ­ரா­ளிக்­கு­ழுக்­களை ஒன்­றாக சந்­திப்­புக்கு அழைத்­த­போது கரு­ணா­நி­தியும் அவர்­களை சந்­திப்­புக்கு அழைத்­த­தா­கவும் இதனால் தமிழ்­போ­ரா­ளிக்­கு­ழுக்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டான நிலை­மைகள் ஏற்­பட்­ட­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது.
ஆனாலும் ஈழத்­த­மி­ழர்­களின் நலன்­க­ளுக்­காக கலைஞர் கரு­ணா­நிதி தொடர்ச்­சி­யாக நட­வ­டிக்­கை­களை எடுத்து வந்­தி­ருக்­கின்றார். இலங்­கையில் தமி­ழர்­களின் உரி­மைக்­காக ஜன­நா­யக வழியில் தமிழ் தலை­வர்கள் நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக போராட்­டங்­களை நடத்தி வந்­தனர். தந்தை செல்­வ­நா­யகம் தலை­மையில் இதற்­கான ஜன­நா­யக வழிப்­போ­ராட்­டங்கள் இடம்­பெற்­றன. இவ்­வா­றான நிலையில் 1956 ஆம் ஆண்டு சிதம்­ப­ரத்தில் நடை­பெற்ற திரா­விட முன்­னேற்­றக்­க­ழக பொதுக்­கு­ழுவில் இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்ற தீர்­மா­னத்தை முதன்­மு­தலில் கலைஞர் கரு­ணா­நிதி முன்­வைத்­தி­ருந்தார். அன்­றி­லி­ருந்தே ஈழத்­த­மிழர் விவ­கா­ரத்தில் அவர் அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருந்தார்.
ஈழத்­த­மி­ழர்­களின் தலை­வர்­க­ளான தந்தை செல்­வ­நா­ய­கமும் அமிர்­த­லிங்­கமும் தமி­ழர்­களின் பிரச்­சினை தொடர்பில் கலை­ஞரை சந்­தித்த போதெல்லாம் தன்­னு­டைய ஆத­ரவை அவர் வழங்­கி­யி­ருந்தார். ஈழத்­தமிழ் போராளி அமைப்­புக்­க­ளுக்கும் இலங்கை அர­சாங்­கத்­திற்­கு­மி­டையில் திம்­பு ­பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­ற­போது போரா­ளிக்­கு­ழுக்கள் சில­வற்றின் தலை­வர்­க­ளுக்கு அவர் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யி­ருந்தார்.
கரு­ணா­நி­தியை சந்­தித்து திம்­பு ­பேச்­சு­வார்த்­தையில் புௌாட் அமைப்பின் சார்பில் கலந்­து ­கொண்ட தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் பேச்­சு­வார்த்தை தொடர்பில் ஆலோ­சனை கேட்­ட­போது தமி­ழீ­ழக் ­கோ­ரிக்­கை­யினை கைவி­ட­ வேண்டாம், இலங்கை அர­சாங்கத் தரப்­பினர் குறைந்த தீர்­வையே தரு­வ­தற்கு எத்­த­னிப்­பார்கள். எனவே இந்த நிலைப்­பாட்டில் உறு­தி­யாக நிற்­க­வேண்டும். அவர்கள் சில ­ப­டிகள் இறங்­கி­வந்தால் நீங்­களும் சற்று இறங்கி தீர்வைக் காணலாம் என்று அறி­வு­ரையும் கூறி­யி­ருந்தார்.
இவ்­வாறு ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு உறு­தி­யான தீர்வு கிடைக்­க­ வேண்டும் என்­பதில் அவர் அக்­கறை கொண்­டி­ருந்தார். ஈழத்­த­மிழர் விவ­காரம் கார­ண­மாக கரு­ணா­நி­தியின் ஆட்­சிக்­கா­லத்தில் சட்­ட­மன்­றத்தில் பல்­வேறு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன. இருந்­த­போ­திலும் இறுதி யுத்­தத்­தின்­போது கலைஞர் கரு­ணா­நி­தியின் செயற்­பா­டா­னது ஈழத்­த­மி­ழர்கள் மத்­தியில் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை.
2009ஆம் ஆண்டு வன்­னியில் இறுதி யுத்தம் இடம்­பெற்ற வேளையில் தமி­ழ­கத்தில் கலைஞர் கரு­ணா­நிதி தலை­மை­யி­லான ஆட்­சியே நடை­பெற்று வந்­தது. ஈழத்­த­மி­ழர்கள் இறுதி யுத்­தத்­தின்­போது கொன்­று­ கு­விக்­கப்­பட்­டனர். இலட்­சக்­க­ணக்­கானோர் அக­தி­க­ளாக்­கப்­பட்­டனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­ட­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­ய­ம­டைந்­தனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டனர். 90 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான அவ­லங்­க­ளுக்கு கார­ண­மான கொடூர யுத்­தத்தை தடுத்து நிறுத்­து­வ­தற்கு அன்­றைய தமி­ழக அரசு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு ஈழத்­த­மி­ழர்கள் மத்­தியில் இன்றும் புரை­யோ­டிப்­போ­யுள்­ளது.
வன்­னியில் இறுதி யுத்­தத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­ட­போது தமி­ழ­கத்தில் பெரும் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டது. முத்­துக்­குமார் உட்­பட பலரும் தீக்­கு­ளித்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டனர். ஈழத்­த­மி­ழர்கள் கொன்று குவிக்­கப்­பட்­டதை தாங்­க­மு­டி­யாது இவர்கள் இவ்­வாறு தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டனர்.
இந்­த­நி­லையில் முத­ல­மைச்­ச­ராக இருந்த கரு­ணா­நிதி இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திற்கு யுத்­தத்தை நிறுத்­து­மாறு கோரி உரி­ய­வ­கையில் அழுத்தம் கொடுக்­க­வில்லை என்று குற்­றம்­சாட்­டப்­பட்­டது. யுத்­தத்தை நிறுத்­து­மாறு சட்­ட­ச­பையில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­ட­ போ­திலும் மத்­திய அர­சுக்கு உரிய அழுத்­த­ங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. யுத்தம் நிறுத்­தப்­ப­டா­ததைக் கண்­டித்து அண்ணா நினை­வி­டத்தில் கலைஞர் கரு­ணா­நிதி சில மணி­நே­ரங்கள் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருந்தார். ஆனாலும் இலங்கை அர­சாங்கம் துப்­பாக்­கி­களை மௌனிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­ததை அடுத்து இந்த உண்­ணா­வி­ர­தத்­தையும் அவர் கைவிட்­டி­ருந்தார்.
இந்த உண்­ணா­வி­ரதம் தொடர்பில் அன்­றைய காலப்­ப­கு­தியில் பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த விடயம் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனும் கலைஞர் கரு­ணா­நி­திக்­கான இரங்கல் செய்­தியில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.
இலங்கைத் தமி­ழர்­க­ளுக்­காக கலைஞர் எத்­த­னையோ போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். எனினும் முள்­ளி­வாய்க்­காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்­கிரம் பெற்­றி­ருந்­த­போது கலைஞர் அவர்கள் மத்­திய அர­சுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து அழிவை தடுத்­தி­ருக்க முடியும் என்ற ஆதங்கம் எம்­மக்கள் மத்­தியில் இன்றும் உண்டு என்று விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.
உண்­மை­யி­லேயே இறு­தி­யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. இந்த ஒத்துழைப்புக்கு அன்றைய இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவே நன்றிகளைத் தெரிவித்திருந்தனர். இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் யுத்தத்தை இலங்கை அரசாங்கம் வெற்றிகொண்டிருந்தது. இந்தவேளையில் யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதற்காக அன்றைய பிரான்ஸ், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். ஆனால் அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் தலைமையிலான அரசாங்கம் தமிழக மக்கள் பொங்கி எழுந்தபோதிலும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது.
ஆனாலும் அன்றுதொட்டு ஈழத்தமிழர் விவகாரத்தில் அக்கறை செலுத்தி வந்த கலைஞர் கருணாநிதியின் மறைவு ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள் என்றும் மறக்க முடியாதவை. மொத்தத்தில் கலைஞரின் மறைவானது தமிழ்கூறும் நல்லுலகிற்கு இழப்பாகவே அமைந்திருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad