எதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு! சம்பந்தரின் ஆறுபக்க அறிக்கை!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 19, 2018

எதிர்கட்சி தலைவர்: நீக்கியமை தவறு! சம்பந்தரின் ஆறுபக்க அறிக்கை!!

"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானமானது, அவசரமாகவும் – அரசமைப்பை மீறும் வகையிலும் எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கின்றது."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
"2015ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றம் செப்டெம்பர் மாதம் கூடியபோது – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராக என்னை நீங்கள் (சபாநாயகர்) ஏற்றுக்கொண்டீர்கள் .
நாடாளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதிகூடிய ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டீர்கள். அந்தத் தீர்ப்பை நீங்கள் வழங்கியபோது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
எனினும், நேற்றைய தினம் (டிசம்பர் 18ஆம் திகதி) மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கோரிக்கையை நீங்கள் ஏற்று மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக அறிவித்தீர்கள்.
இரண்டுமுறை நீங்கள் மீளுறுதி செய்து எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் நியமித்த என்னைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பை நீங்கள் செய்ததுமன்றி, இந்தச் செயலானது தற்போதைய நாடாளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது. மேலும், என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில் உங்களுக்குப் பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியை இது தோற்றுவிக்கின்றது.
நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட அதிகளவு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொண்டுள்ளதைக் கேள்விக்குட்படுத்த முடியாது. எனினும், நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.
இதற்குக் காரணம் என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும் ஒருசாரார் அரசில் அங்கம் வகித்திருந்தார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, அரசின் தலைவர் மட்டுமல்லாது பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஒரு அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான இன்னும் பலர் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர். அவர்கள் எல்லோரும் கூட்டாக நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள்.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதானது முறையற்ற செயலாக அமைந்திருக்கும். இந்தப் பின்னணியில்தான், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படுவதை நடைமுறைப்படுத்தி என்னை நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இரண்டு முறை ஏற்றுக்கொண்டீர்கள்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. எமது அரசமைப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய உயர்மட்டத்தில் நீதித்துறையால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சில முடிவுகள் இந்த விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் மேற்குறித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நீங்கள் தீர்மானமொன்றை வழங்கியிருக்கின்றீர்கள்.
நீதிமன்றத் தீர்ப்புக்கமைய இம்மாதம் 16ஆம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால், அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசு ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை. நேற்று 18ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் சபையிலே கடந்து வந்து அரச தரப்பில் அமர்ந்து கொண்டனர். அரசு ஒன்று நியமிக்கப்படாத இந்தப் பின்னணியில் அவசரமாக இன்னுமொருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
தற்போது பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை நீக்காமல் அப்படியான அறிவிப்பை செய்தமையானது விடயங்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. மேலும், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர் நீங்கள் அறிவித்த அந்த நாளில் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லை என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். நீங்கள் எடுத்த தீர்மானமானது அவசரமாகவும் எமது அரசமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது.
மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இலங்கை தனது மிக முக்கிய சட்டமான அரசமைப்பை மதிக்காத ஒரு தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
பிளவுபடாத - பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மூலகாரணமாக அமைந்த பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகின்றார்கள்
இந்தச் சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டியதன் அதிமுக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்கிறது.
முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசமைப்பின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும்” - என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad